சீர்காழி. நவ.14: சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க நாகை கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து ஆர்டிஓ ஆய்வு செய்தார்.சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் 2500 ஏக்கர் விளைநிலங்கள் இருந்து வந்தனர். இந்த விளைநிலங்களுக்கு பாப்பான் ஓடை வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.. ஆனால் காலபோக்கில் வாய்க்கால்களில் தண்ணீர்வராததால் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. இதனால் பாசன வாய்க்கால்கள், வடிநீர் வாய்க்கால்கள் தூர்வார படாததாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் மழைகாலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, டைபாய்டு, சிக்கன்குனியா, போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன. மேலும், கழிவு நீர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் தேங்கி நிற்பதால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பான செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது.
இதனை அறிந்த நாகை கலெக்டர் சுரேஷ்குமார் சட்டநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்காலை தூர்வாரி நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை ஆர்டிஓ தேன்மொழிக்கு உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து ஆர்டிஓதேன்மொழி சட்டநாதபுரத்தில் கழிவுநீர் நிரம்பி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்காலை பார்வையிட்டு தாசில்தார் சங்கர், பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், மண்டல தனி தாசில்தார் பாபு ஆகியோரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு சட்டநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்கால் தூர்வாரிஆக்கிரமிப்பு அகற்றபட்ட உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சட்டநாதபுரம் வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ்க்கும் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்ட நாகை கலெக்டர் சுரேஷ்குமாருக்கும் விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.